சமத்துவமே மகத்துவம் பேச்சு போட்டி

samathuvam magathuvam speech in tamil

என் உள்ளத்தின் வழியே பொங்கும் அன்புடன் என் இரு கரம் கூப்பி எல்லோருக்கும் வணக்கங்கள். மனிதனே மனிதனை மறந்து போகும் காலம் இது. இருப்பினும் சமத்துவமாய் வாழ்வதன் மூலம் இந்த உலக நிலைப்பாட்டிற்கு வழிவகுக்கலாம் என நாம் அறிந்த உண்மை. இதன் அடிப்படையில் நானும் சமத்துவமே மகத்துவம் என்பதை பற்றியே இங்கு கூற வந்துள்ளேன்.

இவ்வுலகத்தில் சமத்துவமாய் தனிநபருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து உள்ளதா? இல்லை காரணம் ஒவ்வொரு நபருக்கும் சமத்துவத்தை அறியாமலே வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். சமத்துவமான வாழ்க்கை ஒன்றை நினைத்து பார்த்தால். அங்கு ஒவ்வொரு மனிதனின் திறமையும் கௌரவிக்கப்படும். எனவே சமத்துவமே மகத்துவம் என்பது உண்மை.

சமத்துவம் என்றால் என்ன

தனி நபர் அல்லது பல நபர்களின் அடிப்படை கூறுகள் அதாவது இனம், மொழி, மதம், பாலினம், சமயம், தேசிய பூர்வீகம் என்பவற்றில் வேறுபாடுகள் இன்றி சமமாகவே நன்மைகள் வழங்கப்படுதல் அல்லது தனிநபருக்கு கிடைத்தல் சமத்துவம் ஆகும்.

நாட்டு மக்களாக எமக்கு வாக்களிக்கும் உரிமையும், நாட்டின் அக்கறை பற்றியும் உரிமையை சமத்துவம் மூலம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

சமத்துவம் பற்றி கூறப்பட்ட எடுகோள்கள்

“எவர் உடம்புக்கும் சிவப்பே
ரத்த நிறமப்பா
எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே
இயற்கை குணமப்பா”

என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எல்லோரும் சமம் என்ற பொருளில் கூறி உள்ளார்.

“எல்லோரும் ஓர் குலம்
எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்தியமக்கள்
எல்லோரும் ஓர் நிறை
எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இன்நாட்டு மன்னர்கள்”

என பாரதியார் சமத்துவத்தை இவ்வாறு கூறியுள்ளார்.

“ஆணும் பெண்ணும் நிகரனக்
கொள்வதால் அறிவில் ஓங்கி
வையம் தழைக்கும்”

என பாரதிதாசன் ஆணும் பெண்ணும் சமம் என்பதை கூறியுள்ளார். இவ்வாறு பல எடுகோள்கள் சமத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.

சமத்துவம் ஏன் முக்கியமானது

இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் வேறுபாடு இன்றி சமத்துவம் பேணப்பட வேண்டியது கட்டாயமான ஒன்று உள்ளது.

சமூக ரீதியான சமத்துவம் மூலம் நாட்டை பற்றியும் நாட்டு நிலைமை பற்றியும் தெரிந்து கொள்ள கேள்வி கேட்க உரிமை உண்டு. இந்நாட்டை ஆட்சி செய்பவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. இதன் மூலம் நாட்டின் ஒழுங்கற்ற முறைகளையும் அரசியல் அமைப்புகளையும் தனி நபரால் மாற்ற முடியும்.

அதனுடன் பொருளாதார ரீதியான சமத்துவமும் உள்ளது. அதன் மூலம் தனி நபரால் நாட்டின் வளங்களையும் நாட்டு நிலைப்பாட்டையும் பேண முடியும். இதனுடன் தனி நபரின் திறன்கள் அடிப்படையிலும் நாட்டை சிறப்புற மாற்றலாம்.

சமத்துவத்தை மீறும் போது ஏற்படுபவை

நாட்டின் சமத்துவத்தை சரியாக ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவர் கடமை. இருந்த போதும் அது மீறப்படுகின்றது. இதன் மூலம் அந்த நாடு பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படலாம்.

அவற்றில் நாட்டின் இன மத ரீதியான கலவரங்கள் தூண்டப்படல். ஆண் பெண் என்ற அடக்கு முறை ஏற்படல். சாதி என்ற பெயரில் பல தீய செயல்கள் உருவாகும். சிறுவர் அடக்குமுறை. சிறு வயது திருமணங்கள். நாட்டிற்கு தேவையில்லா பொருள் விநியோகம் என இன்னும் பல பிரச்சினை நாட்டில் ஏற்படும்.

காரணம் சமத்துவ இன்மையால் பலர் போடும் நாடகம் இது. அதனை இல்லாது ஒழித்து நாட்டையும் நாட்டு மக்களை காப்பாற்றுவது தனி நபரின் கைகளிலே உள்ளது. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது.

சமத்துவத்தை உருவாக்கும் வழி

ஆணுக்கு பெண் சமம் என்று சமூகம் உருவாக வேண்டும். சாதி அடிப்படையில் கீழ் மேல் என்ற பிரிவு இல்லாத சமூகத்தை காண வேண்டும். மதங்களில் இனங்களில் பிரிவுகளை தூண்டுபவரை தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

தனி மனிதனிடையே வேறுபாடை உடைத்தெறிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஓர் சமத்துவமான நாட்டை எம்மால் சிறிதளவில் பாதுகாக்க முடியும்.

முடிவுரை

சமத்துவமான நாட்டை கொண்டு வருவதே நாட்டிற்கும் தனிநபரிற்கும் உகந்தது. எல்லாவற்றையும் சரிசமனாய் பார்ப்பதனாலேயே எல்லாம் முறையாகவே கிடைக்கப்படும்.

எனவே “ஒரு நாடாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் சமத்துவமே மகத்துவம்” இக்கூற்றின் உண்மை தன்மையை உலகறிய செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி இத்துடன் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி வணக்கம்.

Read More:

விடுதலை போரில் தமிழர்களின் பங்கு பேச்சு போட்டி